புதுடெல்லி: வரும் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 8 முதல் 8.5 சதவீதம் வரை உயரும் என, பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. வரும் 2022-23 நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதை முன்னிட்டு, முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் தயாரித்த பொருளாதார ஆய்வறிக்கையை, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தார். இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘வரும் 2022-23 நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சியின் குறியீடாக கருதப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 8 சதவீதம் முதல் 8.5 சதவீதம் வளர்ச்சியை கொண்டிருக்கும். நடப்பு நிதியாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 9.2 சதவீதமாக இருக்க சாத்தியக்கூறுகள் உள்ளன.
துறை ரீதியாக, தொழில்துறை உற்பத்தி 11.8 சதவீதம், வேளாண்துறை வளர்ச்சி 3.9 சதவீதம் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருட்கள் மற்றும் சேவைகளில் முன்னேற்றம் காணப்படுவதால், பொருளாதார வளர்ச்சிக்கு இது உதவிகரமாக இருக்கும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஏற்ற சூழல்களை கொண்ட நாடுகளில், அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக இந்தியா 3வது இடத்தில் இருக்கிறது. கொரோனா பரவல், பொருளாதார வளர்ச்சி இனியும் பாதிப்பதற்கு வாய்ப்பில்லை என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை மனதில் வைத்துதான், இந்த ஆய்வறிக்கையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பற்றிய கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது’. இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.